கிருஷ்ணாவின் மனைவி.

Filed in General on Jun 3rd 2008

கிருஷ்ணாவின் மனைவி, இனிமே ‘கிம’-ன்னு சுறுக்கமா அழைக்கப்படப்போற இவங்க நல்லா தமிழ் பேசுவாங்க. பெப்ஸி உமா மாதிரி அழகான கனீர் குரல். அமேரிக்கால, நியூ யார்க் நகரத்துல வேலை செய்யறாங்க. ‘கிம’ வேலை பாக்கற அலுவலகத்துல அவங்கள ரொம்ப வேலை வாங்கறாங்க. காலைல 9.30 மணிக்கு அலுவலகத்துக்குள்ள போனா, மதியம் சாப்பாட்டு இடைவேளையைத் தவிர, மாலை 5.30 மணி வரைக்கும் வேலை வேலை வேலைதான். வேலை முடிச்சுட்டு வீட்டுக்குப் போனதுக்குப்போனதுக்கு அப்புறமும் அலுவலக வேலைக்காக ‘லாகான்’ பண்ணி சில மணி நேரங்கள் வேலை பார்ப்பாங்க. வழக்கமா 8 மணி நேரம் தூங்கும் ‘கிம’ இப்போல்லாம் அவ்வளவு நேரம் தூங்க முடியறது இல்லை. ரொம்ப நாளைக்கு அப்புறம் நேத்துதான் 7 மணி நேரம் தூங்க முடிஞ்சுது. 8 மணி நேரம் நிம்மதியா தூங்கலன்னா ‘கிம’ க்கு மற்ற வேலைகள் ஒழுங்காவே ஓடாது. ஆனா ‘கி’-க்கு அப்படியில்லை. அவர் நாலு மணி நேரம் அஞ்சு மணி நேரம் தூங்கினாலும் அடுத்த நாள் வேலைக்கு சீக்கிரமா போக முடியுது. ‘கிம’க்கு அது ரொம்ப கஷ்டமா இருக்கு.

‘கிம’ அடுத்த வாரம் இந்தியாவுக்கு போறாங்க. விடுமுறைக்கு. மூனு வாரம். நிம்மதியா ஒரு வேலையும் செய்யாம ரெஸ்ட் எடுத்துட்டு வரணும். திரும்ப வரும்போது அவங்க கம்ப்யூட்டரோட பாஸ்வேர்ட்கூட அவங்களுக்கு ஞாபகம் இல்லாத அளவுக்கு கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும். ரெண்டு வாரம்தான் அலுவலகத்துல விடுமுறை நாட்கள். ஒரு வாரம் ‘காம்ப் ஆஃப்’. இப்போ கடுமையா வேலை செய்யறதுனால அவங்க மேனேஜர்கிட்ட பேசி ‘காம்ப் ஆஃப்’க்கு பர்மிஷன் வாங்கிட்டாங்க. (’காம்ப் ஆஃப்’-ன்னா என்னன்னு தெரியலையா, சம்பளத்தோட விடுமுறை. வீட்ல இருந்து அதிக நேரம் வேலை பார்த்ததுனால, மேனேஜர் மகிழ்ந்து சம்பளத்தோட ஒரு வாரம் விடுமுறை கொடுத்திருக்காரு). திரும்ப வந்து எப்டியும் ஒரு வாரமாவது ‘ஜெட் லேக்’, அது இது-ன்னு ஓ பீ அடிச்சுக்கலாம். மொத்தத்துல ஒரு நாலு வாரம் ஃப்ரீயா இருக்கணும்.

இந்தியா வரப்போறதா சொன்னொன்ன, ‘கி’வோட அக்கா ஒரு லிஸ்ட் கொடுத்துட்டாங்க. ஷாப்பிங் பண்றதுக்கு. இந்தியால உபயோகப்படுத்தற மாதிரி மொபைல் போன், ப்ளூ டூத் ஹெட் செட், ட்டாய்ஸ், சாக்லேட் இன்னும் நெறைய. இதையெல்லாம் ‘கிம’ வாங்கப்போறது இல்லை. இந்தியாலயே நல்ல மொபைல் ஃபோன்கள் கெடைக்குது. எதுக்கு இங்கேயிருந்து வாங்கிகிட்டு போகணும்? ‘கி’வுக்கும் வாங்கிட்டுப் போறதுல இஷ்டம் இல்லை. சும்மா சாக்லேட் மட்டும்தான் வாங்கிட்டு போறாங்க.

ஆமா, ‘கிம’ பத்தி இவ்ளோ தூரம் சொல்றியே, அவங்களோட பேரென்ன, உனக்கும் அவங்களுக்கும் என்ன உறவு-ன்னு கேக்கறீங்க?

அலுவலகத்துக்கு போகும்போது ரயில்ல நான் உக்காந்திருந்த இருக்கைக்கு நாலு இருக்கைகள் பின்னாடி நின்னுகிட்டு அவங்களோட நண்பர்கிட்ட பேசிகிட்டு இருந்தவங்கதான் இந்த ‘கிம’. ரயில்ல யாரோ அவங்க நண்பர்கிட்ட பேசிகிட்டு வர்ற ஒருத்தர்கிட்ட, அவங்களோட பேர, நான் எப்டி கேக்க முடியும்? அது அவ்ளோ நாகரீகமா இருக்காதுல்ல??!!

சரவ் (Sarav) எழுதியது | 4 responses so far

I miss this guy Sujatha!! :(

Filed in General on May 19th 2008

சுஜாதா சாரோட இன்னோரு கதை. கர்ஃப்யூ.
சதாரணமானத் தொடக்கம்.
சாதாரண உரையாடல்களில் கொஞ்சம் சீரியஸான மேட்டர்.
உணர்வுப்பூர்வமான திருப்பம்.
அழுத்தமான முடிவு.
அப்புறம் நக்கலான முடிவு.

நக்கலான முடிவைப் படித்ததும் தனிமையிலும் கொஞ்சம் சிரிப்பு.
சிரித்து முடிப்பதற்குள் அவருக்காக ஒரு துளி கண்ணீர்.
I miss this guy, Sujatha. :’(

சரவ் (Sarav) எழுதியது | One response so far

செந்தில்கள். (Updated)

Filed in General, சிறுகதை முயற்சிகள் on May 10th 2008

பள்ளிக்கூட நாட்கள்ல இருந்தே இந்த செந்தில்கள் என்னை விட்டதே இல்லை. செந்தில், செந்தில் குமார், செந்தில் குமரன், செந்தில் வேலன் இப்டி பல பெயர்கள்ல கூடவேதான் வந்துகிட்டு இருக்காங்க. சில நேரம், ஒரே வகுப்புலயே ரெண்டு செந்தில் குமார்களும் இருந்திருக்காங்க. அதுவும் ஒரே இனிஷியலோட. பல்லு எடுப்பா இருக்கற ஒருத்தனை ‘பல்லு செந்தில்’ன்னும் சந்தனப் பொட்டு வெச்சிருக்கற செந்திலை ‘சந்தனப் பொட்டு செந்தில்’ன்னும் அடையாளம் வெச்சுக்க வேண்டியிருக்கும். சில செந்தில்கள் ரொம்ப நல்லா படிச்சு எனக்கு வேட்டு வைப்பாங்க. ‘பக்கத்துல உக்காந்திருக்குற செந்திலைப் பாருடா? அவன்லாம் நல்லாப் படிக்கல? ஏன் நீ மட்டும் என் உயிரை வாங்கற? அவன் ****** வாங்கிக் குடிடா!! அப்பவாவது உனக்கெல்லாம் புத்தி வருதான்னு பார்ப்போம்’ன்னு எட்டாம் வகுப்பு வரலாறு வாத்தியார் என்னைக் கேவளப்படுத்த காரணமா இருந்திருக்கான் ஒரு செந்தில். ‘அவன் கையெழுத்தைப் பாரு. முத்து முத்தா இல்லை. நீ மட்டும் ஏன் கோழி கிறுக்கறமாதிரி எழுதற?’-ன்னு மூனாம் வகுப்புலயே மணிக்கட்டு உடைய அடி வாங்கிக் கொடுத்திருக்கான் இன்னொரு செந்தில். இதுவாவது பரவாயில்லை.
‘செந்தில் கூட நீ சேரவே கூடாது!!’ இது எங்க மாமா.
‘எந்த செந்தில்?’ வேற எங்கேயோ பார்த்துகிட்டு.
‘அதான் உன் கூட கிரிக்கெட் வெளையாட வர்றானே அவன்!!’
‘கிரிக்கெட் வெளையாடாவா? யாரு??’ பாவமான முகம்.
‘தெரியாத மாதிரி நடிக்காத. அந்த ‘டீக்கடை செந்தில்’. அவன் ஆளும் மொகறையும்’
யார் யார்கூட ஃப்ரெண்டா இருக்கணுங்கறதையெல்லாம் நீங்க சொல்லக்கூடாது-ன்னு மனசுல ஓடினாலும்,
‘அவன் கூட ஏன் சேரக்கூடாது?’ (செட்டியார் கடைல அவன் ஒளிஞ்சு நின்னு சிகரெட் பிடிச்சதை மாமா பாத்துட்டாரு-ன்னு ஏற்கனவே எனக்குத் தெரியும்)
‘ஏன்னு எதிர்த்தாக்கேக்கற? மாமா சொன்னா சரின்னு கேட்டுக்கமாட்ட??!!’ உயர்ந்த குரலில் அம்மா.
‘இல்லம்மா, ஏன்ன்னு..’
‘அவன் கூட சேராம இருந்தா என்னை மாமா-ன்னு கூப்டு. இல்லை அப்டி கூப்டறதை நிறுத்திடு’
இப்படி எங்க மாமா, அம்மாக்குப் பிடிக்காத செந்தில்கள் இருந்திருக்காங்க.

பண்ணிரண்டாவது முடிச்சுட்டு இன்ஜினியரிங் போகும்போது, ‘முருகா, ஆண்டவா, இந்த ‘சேந்தில்கள்’ட்ட இருந்து ஒரு விடுதலை வாங்கிக்கொடுப்பா’ன்னு வேண்டிகிட்டுப் போனாலும், ‘ஹாய், கவுன்ஸ்ஸிலிங்க உனக்கும் இந்தக் காலேஜ்தான் கெடைச்சுதா?’-ன்னு கூடவே வந்து ஒட்டிக்கிட்டான் பண்ணண்டாம் வகுப்பு செந்தில். ‘வேட்டு வெச்சுட்டியே முருகா’-ன்னு நெனைச்சுகிட்டு இருந்தப்பவே ‘நீ எந்த செக்ஷன்? நான் C’ என்றான். ‘நான் B’, அப்பாடா வேற சேக்ஷனுக்காவது போய் தொலைஞ்சியே-ன்னு நெனைச்சுகிட்டு முதல் நாள் வகுப்புல போய் உக்கார்ந்தேன். ‘முதல் பெஞ்ச்சுல இருந்து ஆரம்பிச்சு ஒவ்வொருத்தரா அவங்க பேரைச் சொல்லி அறிமுகம் செஞ்சுக்கங்க’-ன்னு முதல் வகுப்பை தொடக்கி வெச்ச லெக்சரர் சொல்லும்போது ஒரு த்ரில்லிங் ஆரம்பிச்சுது. முதல் வரிசைல முதல் டெஸ்க்ல செந்தில் இல்லை, இரண்டாவது டெஸ்க்ல நோ செந்தில், மூனாவது டெஸ்க்ல செந்தில் நஹி-ன்னு நீண்டுக்கிட்டே வந்த சந்தோஷத்தை மூனாவது வரிசைல மொதல் டெஸ்க்ல ஒரு செந்தில் வெரட்டியடிச்சுட்டான்.
‘குட்மார்னிங், ஐ ஆம் செந்தில் குமரன் ஃப்ரம் தேனி’.

இப்டி வழி நெடூக பல செந்தில்களோட சேர்ந்து பயணம் செஞ்சிருந்தாலும் இவங்களுக்குள்ள பொதுவான விஷயம் அதிகம் இருந்ததில்லை. ஒருத்தன் சாந்து பொட்டு நிறம், இன்னொருத்தன் சந்தனப் பொட்டு நிறம், மற்றொருத்தன் மை பொட்டு நிறம். எடுப்பான பல்லு, இந்திராகாந்தி மூக்கு, சப்பை மூக்கு மேலையும் எப்பவும் கோபம், கப்பைக் காலு, நெட்டைக் கொக்கு இப்டி ஒவ்வொரு செந்திலும் ஒவ்வொரு மாதிரி.

ஆனா, நான் இப்போ சொல்லப்போற சில செந்தில்களுக்குள்ள ஒரு பொதுவான விஷயம் இருக்கு.

முதல் செந்தில்: மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்கணும்-னு ரொம்ப ஆவலா என்ஜினியரிங் கல்லூரில சேர்ந்தவன். அவன் விரும்பிய மெக்கானிக்கல் என்ஜினியரிங் கெடைச்சதுல அவனுக்கு பரம சந்தோஷம். கல்லூரி நாட்கள்ல அவனை சந்திச்ச சந்திப்புகள்ல, அவனோட ஒவ்வொரு பார்வையிலயும் அந்த சந்தோஷம் தெரியும். ஆரம்ப நாட்கள்லல்லாம் கியர் வீல் பத்தியும் சிம்பிள் மெஷின்ஸ் பத்தியுமே மணிக்கணக்குல பேசுவான். ‘யூ நோ, இன் தெர்மோடைனமிக்ஸ்..’-ன்னு ஆரம்பிச்சான்னா, ‘சாமி ஆளை விட்டுடுடா’ன்னு ஓட்டம் எடுத்துடுவேன். ‘யூ நோ, கார்லல்லாம் கார் ஓடும்போதுதான் AC போடணும். நிக்கும்போது போட்டா AC சீக்கிரமே கெட்டுப்போய்டும்’-ன்னு சொல்லுவான். ஏண்டா-ன்னா? கூலிங் சிஸ்டம், கப்ரஸர் சிஸ்டம் பத்தியெல்லாம் அரை மணி நேரம் விளக்கம் சொல்லிட்டு, ‘புரிஞ்சுதா’-ம்பான். ‘ஓ.. ஷ்யூர்’-னு சொல்லிட்டு எஸ்கேப் ஆய்டுவேன். அவன் காலேஸ் ஃபர்ஸ்ட், யூனிவர்சிட்டி செகெண்ட்-ன்னு மெடெல்லாம் வாங்கினான். மேல் படிப்புக்காக, ஐ ஐ டி-யில் தேர்வாகி, ஏர் கண்டிஷனிங் & ரெஃப்ரிஜ்ரேஷன்-லயே மாஸ்டர்ஸ் டிகிரி முடிச்சான். காம்பஸ் இண்ட்டர்வியூலயே தேர்வாகி வேலையில் அமர்ந்தான்.

இரண்டாவது செந்தில்: இவன் எலெக்ட்ரிக்கல்ஸ் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங். வாயைத் திறந்தா மூடாத டைட். எப்பவும் எதையாவது யோசிச்சுக்கிட்டே இருப்பான். திடீர் திடீர்ன்னு எதையாவது கேட்பான். அந்தக் கேள்வி நமக்குப் புரியறதுக்குள்ள இன்னொரு விஷயத்தைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சுடுவான். ஏதாவது ஒரு ஜோக் சொன்னா எல்லோரும் சிரிச்சு முடிச்சப்புறம் பத்து நிமிஷம் கழிச்சு சிரிச்சுட்டு, ‘தட் வாஸ் அ குட் ஜோக்’ அப்டீம்பான். நடந்து போய்ட்டு இருக்கும்போது ‘ஒரு சூப்பர் ஃபிகர் போகுது பாருடா!!’-ன்னு சொன்னா, அந்தப் பொண்ணு அந்தத் தெருவைத் தாண்டிப் போனதுக்கு அப்புறம், ‘எந்த ஃபிகர்?’ம்பான். திடீர்னு ஒரு நாள் தாமஸ் ஆல்வா எடிசனைத் திட்டுவான். ‘அந்த ஆள் பண்ணின தப்புடா குண்டு பல்பைக் கண்டுபிடிச்சது’-ம்பான். ‘குண்டு பல்ப் இருக்கே, அது வெளிச்சத்தையே உண்டாக்கலை. இட் ப்ரொடியூஸஸ் ஒன்லீ ஹீட். சூட்ல இருந்து கெடைக்கற சைடு ப்ராடக்ட்தான் வெளிச்சம். அந்த ஆள் கண்டுபிடிச்சதால இப்போ உலகமே சூடாயிப் போய் கெடக்குது.’-ன்னு க்ளோபல் வார்மிங்க்கு எடிசன் ஒரு முக்கியமான காரணம்-ன்னு சொல்லுவான். ‘உலகம் பூராவும் ‘எல் ஈ டி’(LED) லைட்டுகளுக்கு மாறணும். அதுதான் ரொம்பக் கம்மியா சூட்டை உண்டாக்குது’ன்னு சொல்லுவான். சூரிய சக்தி, ‘எல் ஈ டி’, ‘ஓ எல் ஈ டி’, ஃபைபர் ஆப்டிக்ஸ், இதெல்லாம்தாண்டா எதிர்காலத்துல உலகையே ஆளப்போகுது சொல்லிகிட்டே இருப்பான். ‘ஒரு நிமிஷம் முழுக்க வாயை மூடிக்கிட்டு இருக்கணும்’-ன்னு நூறு ரூபாய் பந்தயம் வைத்து பல முறை தோத்திருக்கான்.

மூனாவது செந்தில்: ரெண்டாவது செந்திலுக்கு அப்டியே தலைகீழ் இவன். அவன் லைட் எமிட்டிங் டையோடு பத்தி பேசினா, இவன் எப்பவும் ‘மண்டையோடு’ பத்திதான் பேசுவான். ‘வாழ்க்கைல எல்லாமே ஒரு பிடி சாம்பல்தான்’-ன்னு சொல்லிட்டு ஒரு காதுல ஆரம்பிச்சு மறு காது வரைக்கும் நெத்தி வழியா ரோடு போட்ட மாதிரி திருநீரு பூசிப்பான். ‘வாழ்க்கைல பணத்தையும், மனத்தையும் மட்டுமே தேடித் தேடி எல்லாருமே அலையாதீங்க. ஆத்ம ஞானத்தைத் தேடுங்க. உங்க எல்லோருக்குள்ளேயும் ஒரு சக்தி தூங்கிக்கிட்டு இருக்கு. உங்களுக்கு அது தெரியல. அந்த சக்தி பேரு குண்டலினி. அந்த சக்தியை எழுப்பினா ஆத்ம ஞானத்தை அடையற வழி உங்களுக்குத் தெரியும். அந்த ஞானத்தைப் பெற முதல் படி, ‘ஓம்’-ங்கற மந்திரம். மனிதனோட ஆதார ஸ்வரமே அதுதான். தினமும் ஓங்காரத்தை உச்சரிச்சீங்கன்னா ஞானப் பாதைல நடக்க ஆரம்பிக்கலாம். இந்த ‘ஓம்’ இந்து மதத்துல மட்டும் இல்ல. கிருஸ்துவ மதத்துலயும் இருக்கு. இந்த ‘ஓம்’தான் அங்க போயி, ‘ஓமென்’-னு ஆகி, அதுவே இப்போ ஆமென் ஆய்டுச்சு. அதே மாதிரி இஸ்லாம்ல, ‘ஓமின்’-னு ஆகி, அதுவே மறுவி, இப்போ ‘அமீன்’ ஆயிருக்கு. இதையெல்லாம் விட்டுட்டு, கல்லூரி, படிப்பு, வேலை, காதல், கல்யாணம், குழந்தை-ன்னு வேற ஏதோதோ பாதைகள்ல நீங்க எல்லோரும் ஓடிகிட்டு இருக்கீங்க. அதையெல்லாம் விட்டுட்டு என் கூட ஆன்மீகப் பாதைக்கு வாங்க’. இதையே வெவ்வேறு நேரங்கள்ல வெவ்வேற மாதிரி சொல்லுவான். சில நேரம் தூக்கம் வராத நண்பர்களும், ‘ஊறுகாய்’ கிடைக்காத குடிமகன்களும் அவனை தூண்டி விட்டு, ‘கோயில்லல்லாம் ஏன்டா ஆபாசமான சிலைகள்லாம் வெச்சிருக்காங்க?’, ‘முருகனே வள்ளியை லவ் மேரேஜ் பண்ணியிருக்காரு. அதுவும் ரெண்டாம்தாரமா!! நாம ஏண்டா காதலிக்கக்கூடாது?’ மாதிரி கேள்விகளையெல்லாம் கேட்டு அவனோட சூடான பதில்கள்ல குளிர்காய்வாங்க.

சரி, இவங்களுக்குள்ள பொதுவான விஷயம் என்ன?
பொதுவான விஷயம் என்னன்னா, மூனு பேரும் இந்தியாவோட முன்னனி ஐடி நிறுவனங்கள்ல வேலை செய்யறாங்க.

மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பை மூச்சுக் காத்தா சுவாசிச்சுக்கிட்டு இருந்த முதலாம் செந்தில் படிப்பை முடிக்கறதுக்கு முன்னாடியே காம்பஸ் இண்ட்டர்வியூல வேலை கெடைச்சு, முன்னனி ஐடி நிறுவனத்துல சேர்ந்தான். சேர்ந்து ஒரு வருஷம் வரைக்கும் சம்பளம் வந்துதே தவிர எதுக்கு சம்பளம் தர்றாங்கன்னு அவனுக்கு புரியவேயில்லை. அவன் படிச்ச படிப்பையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறக்க ஆரம்பிச்சிருந்தப்போ, ஒருநாள் திடீர்னு, ‘உங்களுக்கு டாக்குமெண்டேஷன் வருமா?’-ன்னு கேட்டாங்க. அன்னில இருந்து அவன் டாக்குமெண்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆய்ட்டான். இன்னிக்கு அவனுக்குக் கீழ பல புதிய என்ஜினியர்கள் வேலை செய்யறாங்க. சாஃப்வேர் ப்ராஜெக்ட்களுக்கு டாக்குமெண்ட் தயாரிக்கற வேலைல. CMM லெவெல் 5 சர்ட்டிஃபிகேட் வாங்கறதுக்கு என்னென்ன டாக்குமெண்ட்டுகள் தேவை-ங்கறதெல்லாம் இப்போ அவன் விரல் நுனில இருக்கு. அவன் படிச்ச அவனோட லட்சியப் படிப்பையெல்லாம் மறந்துட்டு, அவன் வேலை பார்க்கற தளத்துல AC சரியா இல்லைன்னா உடனே அட்மினுக்கு ஃபோன் போட்டு ‘AC வேலை செய்யல, ஒரு என்ஜினியரை அனுப்புங்க ப்ளீஸ்?’ என்கிறான். அவனும் ‘ஏர் கண்டிஷனிங் ரெஃப்ரிஜ்ரேஷன்’-லாம் படிச்ச என்ஜினியர்-ங்கறது அவனுக்கே மறந்து போய்டுச்சு.

‘சூரிய சக்தி, ‘எல் ஈ டி’, ‘ஓ எல் ஈ டி’, ஃபைபர் ஆப்டிக்ஸ், இதெல்லாம்தாண்டா எதிர்காலத்துல உலகையே ஆளப்போகுது’ எதிர்காலத்தின் உயிர் நாடியை தன்னோட உள்ளங்கைகள்ல உணர்ந்த இரண்டாவது செந்திலும் ஐடி நிறுவனத்துலதான் வேலைக்கு சேர்ந்தான். வேலைக்கு சேர்ந்த புதுசுல, அவன் நிறுவனத்துல ‘ரெண்டு மெயின்ஃப்ரேம் ப்ராஜெக்ட் வருது’, ‘மெயின்ஃப்ரேம் படிங்களேன்’ என்றார்கள். அவனும் படித்தான், ஆறு மாதங்கள் காத்திருந்தபின் ‘பவர் பில்டர்’ படிக்கச் சொன்னார்கள். படித்தான். சில மாதங்களுக்குப் பிறகு வீ பீ படித்தான். அப்படியே காம் ப்ளஸ் படித்தான், அப்புறம் ஜாவா படித்தான், பின்னர் ஜெயெஸ்பி படித்தான். இப்பொழுது டாட் நெட் 1.1 படித்துக்கொண்டிருக்கிறான். டாட் நெட் 5.0 ரிலீஸாகியிருப்பது அவனுக்கு இன்னும் தெரியாது. எதிர்காலத்தைப் பற்றிய அவனோட சிந்தனைகள் கனவுகள்லாம் அவனோட நிறுவனத்துக்குத் தேவைப்படாததால அதெல்லாம் இப்போ நீரூற்றப்படாத செடிகளா வாடிப்போயிருக்கு.

ஆன்மீகப் பாதையைப் பற்றி அதிகம் சிந்திச்சுக்கிட்டு, மத்தவங்களுக்கெல்லாம் அறிவுரை செஞ்சுகிட்டு இருந்த மூன்றாவது செந்தில் இப்பவும் நிறைய பேருக்கு அறிவுரைகள் சொல்லிக்கொண்டிருக்கிறான். ‘வாழ்க்கைல முன்னேறனும்னா, டெக்னாலஜி மட்டும் கத்துக்கிட்டாப் போதாது. டொமைன் நாளேஜ்ஜும் வேணும். மொதல்ல அதை கத்துக்க பாருங்க. டெக்னாலஜி இன்னிக்கு வரும், நாளைக்கு மாறிடும். ஆனா டொமைன் நாளெஜ் அதுமாதிரி இல்லை. எப்பவுமே ஒன்னுதான். டெக்னாலஜி பலப்பல அவதாரங்கள் எடுக்கும். ஆனா டொமைன் நாளேஜ் எங்கே போனாலும் ஒன்னுதான். மாறிக்கிட்டே இருக்குற டெக்னாலஜிய கத்துக்கறதுல உங்க டைம வேஸ்ட் பண்ணாம டொமைன் நாளேஜ்ஜ கத்துக்கறதுல செலவழிங்க’.
‘என்னடா இன்னிக்கு ப்ரதோஷமாச்சே! கோவிலுக்குப் போகல?’-ன்னு கேட்டா, ‘ஓ இன்னிக்குப் ப்ரதோஷமா?, அதையெல்லாம் மறந்து ரொம்ப வருஷம் ஆகுதுடா. கோவிலுக்குப் போறதுக்கெல்லாம் ஏதுடா டைம். ஆபீஸ்க்கு வந்துட்டுப் போறதுக்கே நேரம் பத்த மாட்டேங்குது’ அப்டீங்கறான்.

சரவ் (Sarav) எழுதியது | 4 responses so far

ப்ராக்டிகல்.

Filed in General, சிறுகதை முயற்சிகள் on Apr 24th 2008

1
‘ப்ராக்டிக்கலா யோசிச்சுப்பாரு கலை. கல்யாணம் பண்ணிக்காம ஒரு பொண்ணால ஒரு லெவலுக்கு மேல வாழ்க்கை நடத்தறது ரொம்பக் கஷ்டம்’ என்று ஆரம்பித்தாள் சுபா.
‘கல்யாணத்தைத் தவிர வேற ஏதும் பேச மாட்டியா? வீட்லதான் இதையே பேசி தொல்ல பண்றாங்கன்னா நீயுமா?’
கலை என்கிற கலையரசியும் சுபா என்கிற சுபஸ்ரீயும் ஒரு இந்திய நிறுவனத்திற்காக, அமெரிக்காவில் ஒன்றாக வேலை பார்ப்பவர்கள். ஒரே நாளில் வேலையில் சேர்ந்து, ஒரே தொழில்நுட்பத்தில் வேலை செய்து, ஒரே நாளில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று, ஆறு வருடங்களைக் கடந்து, இன்றும் நியூ ஜெர்சியில் ஒரே வீட்டில் வசிப்பவர்கள். அலுவலக வேலைகளை முடித்துவிட்டு கார் நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். கலை, கால்களைக் கொஞ்சம் விந்தி விந்தி நடந்துகொண்டிருந்தாள்.
‘நேத்து நைட் நீ தூங்கினதுக்கு அப்புறம், அப்பா கால் பண்ணியிருந்தாரு. உன்னை எழுப்ப வேண்டாம்-ன்னு சொல்லிட்டாரு. நல்ல வரன் ஒன்னு வந்திருக்காம். பையன் ஆஸ்திரேலியால படிச்சுட்டு இப்போ சென்னைல நல்ல வேலைல இருக்காறாம்.’
‘நான் தூங்கல. நீ பேசிட்டு இருந்தது தெரியும். கல்யாணத்தைப் பத்திதான் பேசுவாரு-ன்னு தெரியும். அதான் காலை எடுக்கல.’
‘கால எடுக்காம விட்டுட்டா ப்ரச்சனை சால்வ் ஆய்டுமா?’
‘எப்பப்பாரு சென்னைல ஒரு மாப்ள இருக்கான், பேங்களூர்ல ஒருத்தன் வேலை பார்க்கறான், கலிஃபோர்னியால குப்பை கொட்றான்னு இதையே பேசிட்டு இருந்தா வெறுப்பா இருக்காது?’
‘உன் நல்லதுக்குதானடி சொல்றாரு.’
‘இதைப் பத்தி பேசறத நிறுத்தப் போறியா இல்லையா?’
‘இல்லடி உன் கால் முடியாதது பத்திக்கூட சொல்லிட்டாராம். அவங்களுக்கும் ஆட்சேபனை இல்லைன்னு சொல்லிட்டாங்களாம். அதான் உன்கிட்ட சொல்லச் சொன்னாரு.’
‘ப்ளீஸ் சுபா. ஸ்டாப் இட்.’ கலையின் கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்தன. சுபா காரை ஓட்டினாள். வீடு வரும் வரையிலும் இருவர் மனங்களிலும் எண்ணங்கள் அலை மோதினாலும், காரில் அமைதி நிலவியது.

2
மாதவன். கடந்த ஆறு மாதங்களாக தினமும் காலை 7.20 மணிக்குள் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை அடைந்து 7.22 க்குப் புறப்படும் ரயிலில் ஏறி தாம்பரம் சானட்டோரியம் வரையில் பயணம் செய்யும் சாதாரணன். மெட்ராஸ் எக்ஸ்ப்போர்ட் ப்ராஸஸிங் ஸோனில் உள்ள ஒரு எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியன். ஒல்லியான உருவமும், கருநீல நிறத்தில் பேண்ட்டும், நிறுவனத்தின் பெயர் அச்சிடப்பட்ட நீல நிற சட்டையும், படிய சீவிய தலைமுடியும், நெற்றியில் கொஞ்சம் குங்குமமும் காலைநேர கூட்டத்திலும் அவனைத் தனியாக அடையாளம் காட்டும். இன்று காலை 6.30 மணிக்கே ரயில் நிலையத்தை அடைந்தான். தாம்பரம் செல்லும் ரயிலில் ஏறாமல் ‘சேத்பட் ரிட்டர்ன் ஒன்னு’ என்று டிக்கெட் வாங்கிக்கொண்டு கடற்கரை செல்லும் ரயிலில் ஏறி சேத்துப்பட்டில் இறங்கினான்.
ரயில் ஏறக் காத்திருந்த கலையின் பின்புறமாகச் சென்று ‘ஹாய்’ என்றான்.
கொஞ்சம் திடுக்கிட்டவள் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்
‘ஹாய், என்ன இங்க?’ என்றாள். வேறு யாரும் தங்களை கவனிக்கிறார்களா என்று அவசரமாக நோட்டம் விட்டாள்.
‘இன்னிக்கு சீக்கிரமே எழுந்துட்டேன். அதான் இங்கேயே வந்துட்டேன். எக்ஸ்ட்ராவா ஒரு பத்து நிமிஷம் உன் கூட இருக்கலாம்-ல’ என்று சிரித்தான்.
‘ஏன், இன்னும் கொஞ்சம் சீக்கிரமா எழுந்து என் வீட்டுக்கே வர்றதுதான?’ என்று செல்லமாக கோபித்துக்கொண்டாள்.
‘அட, அதுகூட நல்ல ஐடியாதான் நாளைலேர்ந்து வந்துடறேன்’
‘அதெல்லாம் வேண்டாம், சில நேரம் என் மாமாவோ, இல்ல பக்கத்து வீட்டுக்காரங்களோ என்கூட வருவாங்க. நீ என் கூடப் பேசறதைப் பார்த்தாங்கன்னா, அடுத்த நிமிஷம் மதுரைக்கு ஃபோன் பண்ணி அப்பா-ட்ட சொல்லிருவாங்க’
‘இங்கேயே வந்துட்டேன்னு சந்தோஷப்படுவன்னு நெனைச்சேன்.’
‘சந்தோஷம்தான். ஆனா, அப்பாக்கு சேதி தெரிஞ்சுதுன்னா, படிச்ச வரைக்கும் போதும் ஊருக்கு வா-ன்னு சொல்லிடுவாரே, அப்போ என்ன பண்ணுவ?’
‘நேரா மதுரைக்கே வந்து உங்க அப்பாவைப் பார்த்து உங்க பொண்ண காலேஜுக்கு அனுப்புங்க. நான் பத்திரமா பாத்துக்கறேன்னு சொல்லுவேன்.’
‘சொல்லுவ சொல்லுவ’ என்று அதிகம் வெளியில் தெரியாமல் சிரித்துக்கொண்டாள்.
இதற்குள் ரயில் வர, இருவரும் ஏறி, அருகருகில் நின்று கொண்டார்கள். கையில் வைத்திருந்த நோட்டுப் புத்தகங்களும், தோளில் மாட்டியிருந்த லஞ்ச் பையும் இவர்களுக்கு இடையூறு செய்யாதபடி பிடித்துக்கொண்டாள். இவர்கள் இருவரும் பேசுவது இவர்களைத் தவிர வேறு யாருக்கும் கேட்காதபடி பார்த்துக்கொண்டார்கள்.
‘அப்டி என்கூட அதிக நேரம் இருக்கணும்-னு நெனைக்கறவன், சானடோரியத்துல எறங்காம, என்கூட காலேஜ் வரைக்கும் வா, இல்ல வண்டலூர் ஸ்டேஷன் வரைக்கும் வா.’
‘வரலாம்தான். என்ன, இருக்குற வேலையும் போய்டும். உங்க அப்பாட்ட வந்து பொண்ணு கேக்கறப்போ, என்ன வேலை பாக்கற-ன்னு கேட்டா எந்த வேலையும் இல்லைன்னு சொல்லணும். பரவாயில்லை-ன்னு உங்க அப்பா உன்னைக் கட்டிக்குடுப்பாரா’
‘குடுப்பாரு, குடுப்பாரு, என் தங்கச்சியையும் சேர்த்து குடுப்பாரு’ என்று புன்முருவினாள்.
‘அப்ப ரொம்ப நல்லதாப் போச்சு. இன்னிக்கே வேலையை விட்டுட’. சொல்லி முடிப்பதற்குள் தன் சுண்டு விரல் கைப்பிடியோடு சேர்த்து நசுக்கப்பட்டதால் நிறுத்திக்கொண்டான்.
சானட்டோரியம் வந்துதும், ‘என்ன வண்டலூர் வரைக்கும் வரட்டுமா? என்றான்.
‘வேண்டாம் வேண்டாம் களம்பு. நாளைக்கு சேத்பட் வராத. கோடம்பாக்கத்துல பாக்கலாம்’- என்று விடை கொடுத்தாள்.

3

இரவு தொலைபேசி அழைத்தது.
‘அப்பாவாத்தான் இருக்கும், எடுக்காத’ என்றாள் கலை.
கேட்காமல் எடுத்தாள் சுபா.
‘யாரு சுபாவா? கலை எங்கம்மா?’ என்று கேட்டாள் கலையின் அம்மா.
‘இன்னும் ஆஃபீஸ்ல இருந்து வரலம்மா. ஏதாவது முக்கியமான விஷயமா?’ என்றாள் சுபா.
‘ஆமாம்மா, அப்பாக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல. கலைகூட பேசணும்-ன்னு சொன்னாரு. அதான் கால் பண்ணேன்’
‘சரிம்மா, கலை வந்த உடனே பேசச் சொல்றேன்மா’ என்று ஃபோனை வைத்தாள் சுபா.

‘கலை, வீட்டுக்கு ஃபோன் பண்ணுடி’ என்று கெஞ்சலாகச் சொன்னாள் சுபா.
‘பேசினா திரும்பவும் கல்யாணப்பேச்சுதான் வரும்’
‘பழசையே நெனைச்சுகிட்டு இன்னும் எவ்ளோ நாள்தான் இருக்கப்போற? நீ ஊருக்குப் போயி ஆறு வருஷம் ஆகுது. இதுக்குள்ள நான் நாலு தடவை போய்ட்டு வந்துட்டேன். உன்னைப் பாக்கணும்-னு அவங்களுக்கும் ஆசை இருக்காதாடி? உன் நல்லதுக்குதான இவ்ளோ தூரம் சொல்றாங்க. நீ கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கணும்னுதான அவங்களும் நெனைக்கறாங்க!!’
‘எனக்கு சந்தோஷம் வேண்டாம் விட்றுங்களேன்!’
‘கஷ்டம் உனக்கு மட்டும் இல்லடி, உன்னால அவங்களும்தான் கஷ்டப்படறாங்க. நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவங்களுக்கு சந்தோஷம். உன் தங்கைக்கும் சந்தோஷம். அவளும், நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு எத்தனைநாளா காத்துகிட்டு இருக்கான்னு யோசிச்சுப் பாரு.’
மீண்டும் தொலைபேசி அழைத்தது.
கலை எடுத்து ‘ஹலோ’ என்றாள். கலையின் தங்கை பேசினாள்.
‘கலை, நான்தான் பேசறேன். பூத்லருந்து பேசறேன். அப்பாக்கு ஒன்னும் இல்லை. உடம்பு சரியில்லைன்னு சும்மா சொல்றாரு. இன்னிக்கு உன்னைப் பொண்ணு கேட்டு வந்திருந்தாங்க. பையன் ஆஸ்திரேலியால MBA படிச்சிருக்காறாம். சென்னைல வேலையாம். அவரோட தம்பியும் சென்னைலதான் வேலை பாக்கறாராம். அண்ணனுக்கு உன்னையும் தம்பிக்கு என்னையும் கேட்டு வந்தாங்க. உன்கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொல்லியனுப்பிட்டாரு. அதுனாலதான் உன்கிட்ட பேசணும்-ங்கறதுக்காக உடம்பு சரியில்லைன்னு ட்ராமா பண்றாரு. நீ பதட்டப்படாத. அப்புறமா பேசு. வெச்சிறவா?’ என்று வைத்தாள் கலையின் தங்கை.
தொலைபேச்சு விவரங்களை சுபாவிடம் சொன்னாள் கலை.
‘நல்ல வரன்டீ, ரெண்டு பேருக்கும் ஒன்னா கல்யாணத்தை முடிச்சுருவாரு உங்க அப்பா. உன் ஃபேமிலியோட சந்தோஷமே இப்போ உன்கிட்ட இருக்கு. நல்லா யோசிச்சு முடிவு பண்ணு. தயவுசெஞ்சு வீட்டுக்கு கால் பண்ணு. ’ என்றாள் சுபா.
சில மணிநேர யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தாள்.

4
ஏழு மணிக்கே வந்து காத்துக்கொண்டிருந்த மாதவனுக்கு ‘கடற்கரையிலிருந்து மேல்மருவத்தூர் செல்லும் ரயில் ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்துகொண்டிருக்கின்றது’ என்ற அறிவிப்பு வேம்பாகக் கசந்தது.
தாமதமாக வந்த ரயிலில் ஏறி கலையை கண்டுபிடித்து அருகில் வந்தான். அவன் நிற்பதற்கு வசதியாக இடம் ஏற்படுத்தித் தள்ளி நின்றாள், கலை.
‘நேத்து காலேஜுக்கு வரலியோ’ என்றான் மாதவன்.
‘வந்தேனே’ என்றாள் கலை கொஞ்சம் நக்கலாக.
‘7.22 ட்ரெயின்ல உன்னைப் பாக்கவே இல்லையே’
‘ஏழு மணி ட்ரெயின்லயே வந்துட்டேன்’
‘ஏழு மணி ட்ரெயின்ல வண்டலூர் போனியாக்கும்’
‘7.22 ட்ரெயின் தாம்பரம் வழியாத்தான வண்டலூர் போகும்?’
‘ஏழு மணி ட்ரெயின்ல போயி தாம்பரத்துல எறங்கி, அங்கேயிருந்து இந்த ட்ரெயின்ல போனியா?’ என்று கோபமானான் மாதவன்.
‘ஆமா’
‘ஏன், கோடம்பாக்கத்துல ஒரு கேனையன் நிப்பான், அவனைப் பாக்காம போய்டணும்-னு போனியாக்கும்’
கலை சிரித்துக்கொண்டே, ‘சரி சரி. ரொம்பக் கோவப்படாத. என் மாமா ஏதோ வேலையா தாம்பரம் வரைக்கும் போனாரு. அதுனால அவரு பைக்லயே என்னையும் கூட்டிட்டுப் போய்ட்டாரு.’
‘வேண்டாம்-னு சொல்ல வேண்டியதுதான.’
‘ஏன், எதுக்கு-ன்னெல்லாம் கேள்வி வரும். ஒரு நாள்தானன்னு போய்ட்டேன். அதுசரி உனக்கு பைக் ஓட்டத் தெரியுமா?’
கோபம் காற்றோடு கறைய ‘தெரியுமாவா, சூப்பரா ஓட்டுவேன்’ என்றான்.
‘உன் பின்னாடி உக்காந்துகிட்டு ரொம்பதூரம் பைக்ல போகணும்-னு ஆசையா இருந்துச்சு நேத்து’ என்றாள்.

5
சில மணி நேர யோசனைக்குப் பின் சுபாவை அழைத்தாள் கலை.
‘வீட்டுக்கு கால் பண்ணப்போறேன். கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடப்போறேன்’ என்றாள்.
சுபா மகிழ்ச்சியில் குதித்தாள். கலையை கட்டிப் பிடித்துக்கொண்டாள்.
‘சரி சரி உடனே கால் பண்ணு என்றாள்’ அவளே எண்களைத் தட்டி கலையிடம் நீட்டினாள்.
‘ரிங் போகுது.’ என்றாள்.
கலையின் தங்கை தொலைபேசியில் இணைந்துகொண்டு ‘ஹலோ’ என்றாள்.
‘நான் கலை பேசறேன்’
‘ம்ம்ம்.. சொல்லு கலை நல்லாயிருக்கியா?’
‘நல்லாயிருக்கேன். அப்பா இருக்காரா?’
‘இருக்காரு,’ என்றவள் மெதுவான குரலில், ‘நான் உனக்கு ஃபோன் பண்ணினது அப்பாக்குத் தெரியாது. நீயும் காட்டிக்காத’ என்றாள்.
‘காட்டிக்கிட்டாலும் பரவாயில்லை, அப்பா கோவிச்சுக்க மாட்டாரு. அவர்ட்ட கல்யாணத்துக்கு சம்மதம்-னு சொல்லப்போறேன்’ என்றாள்.
‘சரி சரி’ என்ற கலையின் தங்கை, ‘என்னது, என்ன சொன்ன? திரும்பச் சொல்லு?’ என்று ஆச்சரியப்பட்டாள்.
‘ஆமா, கல்யாணத்துக்குச் சம்மதம்-னு சொல்லத்தான் கால் பண்ணினேன்’ என்றாள் கலை.
‘ம்ம்ம்மா, கலை கல்யாணத்துக்கு ஓக்கே சொல்லிட்டா…..’ என்று கத்தினாள் கலையின் தங்கை.

6
7.22 ரயிலில் கோபமாக ஏறினான் மாதவன்.
‘நேத்து உனக்காக என் ஃப்ரெண்ட் பைக்க வாங்கி, பெட்ரொல் போட்டுகிட்டு ரெண்டு மணி நேரம் ஸ்டேஷன் வாசல்லயே காத்துகிட்டு இருந்தேன்.’ என்று பொறிந்தான்.
‘நான் தான் அப்போவே சொன்னேனே வர மாட்டேன்னு, நீ பைக்க கொண்டு வந்துட்டா நான் வந்துடனுமா?’
‘அப்புறம் ஏன் பைக்ல போகணும்னு ஆசை. புத்தகம் சாப்பாடுப் பை எதுவும் இல்லாம நீயும் நானும் மட்டும் போகணும். ரொம்ப தூரம் போகணும்-னெல்லாம் சொன்ன?’ என்றான்.
‘இப்பவும்தான் சொல்றேன். உன் கூடப் போகணும்-ன்னு அதுக்காக, மறுநாளேவா?’
‘உனக்காக ஆஃபீஸ்க்கு லீவு போட்டுட்டு வந்து உக்காந்திருந்தேன்.’
‘நானா லீவு போடச் சொன்னேன். காலேஜ் நாள்ல எவ்ளோ பேர் பஸ்ல காலேஜ்க்கு வர்றாங்க. பைக்ல வர்றாங்க, ஆட்டோல வர்றாங்க. அவங்கள்ல யாராவது ஒரு தெரிஞ்சவன் நம்மளைப் பார்த்துட்டு என் மாமாட்ட போய் சொன்னா என்னாகும்? தாம்பரம் ஏரியால மாமாவுக்குத் தெரிஞ்சவங்க நெறைய பேர் இருக்காங்க. யாராவது பார்த்தாங்கன்னா அவ்ளோதான்’
‘என்னாகும்? உங்க மாமாக்கு என்னிக்காவது ஒருநாள் தெரிய வேண்டியதுதான, இப்போவே தெரியட்டுமே!!’
‘எதுக்கெடுத்தாலும் கோவப்படாத. அதோ பாரு, ஒரு அம்மா உக்காந்திருக்குப் பாரு, அஞ்சாறு மாச கர்பமா இருக்கும்-னு நெனைக்கறேன். என்னிக்காவது ஒருநாள் கொழந்தை பொறக்கத்தான போகுது, இன்னிக்கே பொறக்கட்டுமே-ன்னு இன்னிக்கே பெத்துக்க முடியுமா?’
‘…’
‘இன்னும் ஒரு செமஸ்ட்டர்தான் இருக்கு. அதை நான் ஒழுங்கா முடிக்கணும். அதுவரைக்கும் நாம ஜாக்ரதையாத்தான் இருக்கணும்’
‘…’
மாதவன் எதுவும் பேசவில்லை. முகத்தில் சிரிப்பு காணாமல் போயிருந்தது. இருவரும் வேவ்வேறு திசைகளைப் பார்த்தபடி பயணித்தார்கள்.
சில நிமிட அமைதிப் பயணத்துக்குப்பின்.
‘சரி சரி. ரொம்ப சோகமாய்டாத. நாளைக்குப் போலாம். ஆனா, கோடம்பாக்கத்துக்கு வராத. பைக்க எடுத்துக்கிட்டு வண்டலூர் வா. காலேஜ் பக்கம் இல்ல. ரயில்வே ட்ராக்குக்கு அந்தப்பக்கம் வந்து நில்லு. நான் வர்றேன்.’
மாதவன் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சி வரவும் சானட்டோரியம் ஸ்டேஷன் வரவும் சரியாக இருந்தது.

7
லுஃப்தான்ஸா விமானம் சென்னை வந்து இறங்கியது. ஆறு வருடங்களுக்குப் பிறகு இந்தியக் காற்றை சுவாசித்தாள் கலை. பெட்டிகளை சேகரித்துக்கொண்டு, பெட்டிகள் பாதுகாக்கும் அறைக்குச் சென்றாள். எல்லாப் பெட்டிகளையும் மாலைவரை பாதுகாக்கும்படி கொடுத்துவிட்டு வெளியில் வந்தாள். விமான நிலையத்திற்கு வரவேற்பதற்காக யாரையும் வரவேண்டாம் என்றும், மதுரைக்கு விமானத்திலேயே வந்துவிடுவதாகவும் முன்னமே சொல்லியிருந்தபடியால், வரவேற்க யாரும் வரவில்லை. டாக்ஸியில் ஏறி,
‘கோடம்பாக்கம் ஸ்டேஷன் போங்க’ என்றாள்.
ஸ்டேஷனில் நுழைந்து ‘பீச் டு தாம்பரம் மன்த்லி பாஸ் ஒன்று’ என்றாள்.
வாங்கிக்கொண்டு ரயிலில் ஏறினாள். தாம்பரம் வரை சென்றாள். மீண்டும் அதே ரயிலில் கடற்கரை வரையிலும் சென்றாள். கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், தாம்பரத்திலிருந்து கடற்கரை என்று மாறி மாறி பயணித்தாள். ஓரமான இருக்கைகளாகப் பார்த்து அமர்ந்துகொண்டாள். நெடுநேரம் கண்களை மூடிக்கொண்டு பயணித்தாள். கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை அவ்வப்போது துடைத்துக்கொண்டாள். சில நேரம் ஜன்னலுக்கு வெளியே எதையோ தேடினாள். சில நேரம் ரயிலுக்குள் கைப்பிடிகளை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். சில நேரம் அந்தக் கைப்பிடிகளைப் பிடித்துக்கொண்டு நின்றாள். ஒருவர் முகத்தையும் நேராகப் பார்க்காமல் தவிர்த்தாள்.
மாலைவரை ரயில்களில் மாறி மாறிப் பயணித்தாள். இரவு தொடங்கும் நேரத்தில் சானட்டோரியம் ரயில் நிலையத்தில் இறங்கினாள். அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்தாள். அருகிலிருப்பவர்களுக்குத் தெரியாமல் அழுதாள். சிறிது நேரத்திற்குப் பின், மீண்டும் எழுந்து விமான நிலையத்தை நோக்கிப் பயணித்தாள். விமான நிலையத்தில் முகம் கழிவினாள். கண்ணாடியில் தன் முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு நின்றாள். பெட்டிகளை மீண்டும் பெற்றுக்கொண்டு மதுரை விமானத்தில் ஏற உள்ளூர் விமான நிலையத்திற்குப் புறப்பட்டாள்.

8
மாதவன் அதிகாலையிலேயே புறப்பட்டான். நண்பனின் பைக்கை கடன் கேட்டு முதல் நாள் இரவே சாவியை வாங்கி வைத்துக்கொண்டான்.
‘ஞாபகம் வெச்சுக்க நண்பா, சாயங்காலம் ஏழு மணிக்குள்ள வந்துடு, ரொம்ப லேட் பண்ணிடாத’ என்றான் பைக் கொடுத்த நண்பன்.
‘ஆபத்துக்குக் கைக் கொடுத்த நண்பனை மறந்தாலும் மறப்பேன். பைக் கொடுத்த நண்பனை மறக்க மாட்டேண்டா!’ என்று சிரித்தபடி பைக்கில் புறப்பட்டான். காலை 8 மணிக்கே வண்டலூர் ரயில் நிலையத்திற்கு வந்து, எதிர்புறமாக சென்ற சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டான். அடுத்து வந்த ரயில்களையெல்லாம் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். மூன்று ரயில்கள் தந்த ஏமாற்றங்களை நான்காவது ரயில் துடைத்தெரிந்தது. கலை வந்தாள். வழக்கமாகச் சுடிதாரில் வரும் கலை இன்று புடவையில் தேவதைபோல் வந்தாள். மிக அருகில் வரும் வரையிலும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் மாதவன்.
‘என்ன ஆளையே முழுங்கிடறது மாதிரி பாக்கற?’ என்று கலை கேட்டவுடன்தான் இந்த உலகத்துக்கே வந்தவன் போல் சிலிர்த்தான்.
‘இல்ல பொடவையெல்லாம் கட்டிட்டு வந்திருக்கியா, அதான். புடவை கட்டிகிட்டு நீ நடந்து வர்றதைப் பாக்க ஆயிரம் கண் வேணும்’ என்று சிரித்தான்.
‘இப்பவே ஐஸ் வெக்காத, வண்டிய எடு’ என்றாள்.
மாதவன் பைக்கை உதைத்து உறுமச்செய்தான். புடவைத் தலைப்பை இழுத்துப் பிடித்தபடி பின்னால் ஏறி உக்கார்ந்தாள் கலை.
‘என்ன புடவையெல்லாம் கட்டிட்டு வந்திருக்க?’
‘ஆமா, பீச்சுக்குப் போனா சுடிதார் நனையாதா?’
‘பீச்சுக்கு போறோமா?’ என்று உற்சாகமாக பைக்கை கிளப்பினான் மாதவன்.
‘ஆமாம், மொதல்ல அங்கதான் போறோம்’ என்று அவன் மேல் சாய்ந்து அவனைக் கட்டிக்கொண்டாள். அவனது உற்சாகத்தில் மேலும் சில ‘ற்’ களைச் சேர்த்து உற்ற்ற்ற்சாகமாக்கினாள்.
‘புத்தகம் நோட்டு டிஃபன் பாக்ஸ்ஸெல்லாம் எங்கே?’ என்றான்.
‘இன்னிக்கு ஒன்னும் கெடையாது. வீட்ல, தியரி க்ளாஸ் கிடையாது. ப்ராக்டிகல் க்ளாஸ் மட்டும்தான் அதுனால தேவையில்லைன்னு சொல்லிட்டேன்’
‘ஆமாமா, இன்னிக்கு ஃபுல்லா ‘ப்ராக்டிகல்’ மட்டும்தான். அதுவும் நானே சொல்லித் தறப்போறேன்’-ன்னு சிரித்தான்
‘சீ, அசிங்கமா பேசாத!!’ என்று கடிந்துகொண்டாள் கலை.
வண்டலூரில் இருந்து கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு பயணமானார்கள். கிழக்குக் கடற்கரைச் சாலையை அடைந்ததும் வேகத்தைக் கூட்டினான் மாதவன்.
‘ஏன் இவ்ளோ வேகமா போற, மெதுவா போ. மெதுவா பைக்ல போகறதுதான் என் ஆசையே!!’
‘இல்ல, பாதி நேரம் பைக்லயே போய்ட்டா அப்புறம் ‘ப்ராக்டிகல்’-க்கு டைம் இருக்காதே’ என்று சொல்லி இடுப்பில் கிள்ளு வாங்கிக்கொண்டான் மாதவன். வேகத்தைக் குறைத்து, ஆட்கள் நடமாட்டமில்லாத சவுக்குத் தோப்பிற்குள் வண்டியை செலுத்தினான். வண்டியை நிறுத்திவிட்டு கடற்கரையை நோக்கி நடந்தார்கள். தண்ணீரில் சிறிது நேரம் கால் நனைத்து நின்றார்கள். பிறகு கொஞ்ச தூரம் கை கோர்த்துக்கொண்டு நடந்தார்கள்.
‘உன் கை பஞ்சு மாதிரி இருக்கே!! உள்ளே எலும்பு இருக்கா இல்லையா?’ என்றான் மாதவன்.
வெடுக்கெனக் கையை விடுவித்துக்கொண்டாள் கலை.
திரும்பவும் கையைப் பிடித்து இழுத்து தன் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, ‘இந்தக் கையை நான் வாழ்நாள் முழுக்க பிடிச்சுக்கணும்’ என்றான். கலை வெட்கப்பட்டாள், இப்பொழுது கையை விடுவித்துக்கொள்ளவில்லை.
இருவரும் தண்ணீரில் கால் நனைய நடந்தார்கள். கடற்கரைச் சாலைக்கு வந்து இளநீர் குடித்தார்கள். மீண்டும் கடலுக்குச் சென்று கால் நனைத்தார்கள், நடந்தார்கள். பின்னர் சவுக்கு தோப்பின் முகப்பில் கடலைப் பார்த்தபடி உக்கார்ந்தார்கள்.
‘சரி, உன் ஆசையை நிறைவேத்தினதுக்கு எனக்கு என்ன கொடுக்கப்போற?’
‘ஆசை பைக்ல கூட்டிட்டு வந்ததோட முடிஞ்சுடல. திரும்பவும் என்னைக் கொண்டுபோய் ஸ்டேஷனில் இறக்கி விடறப்போதான் முடியும். அப்போ வேணும்னா ஒரே ஒரு முத்தம் தர்றேன். அதுவும், ஆக்ஸிலேட்டர் கொடுத்த கைக்கு மட்டும்’ என்று சொல்லிச் சிரித்தாள்.
‘எனக்கு வேண்டாம், எனக்குக் குடுக்க வேண்டியதை உதட்டுக்குக் கொடுத்துடு-ன்னு கை சொல்லிட்டா?’
‘இந்த ட்ரான்ஸ்ஃப்ர் எல்லாம் இங்க கிடையாது. வேணும்னா வாங்கிக்க சொல்லு, இல்லைன்னா அதுவும் இல்லை, அவ்ளோதான்’
‘ஓகே, ஓகே. கையே வாங்கிக்குதாம்!!’
‘அது சரி, என் ஆசையை நிறைவேத்தறதுக்காக பைக்ல கூட்டிட்டு வந்துட்ட, உன் ஆசை என்னன்னு சொல்லு’ என்றான்.
‘எனக்கு ஒன்னும் பெரிய ஆசையெல்லாம் இல்லை. ஒவ்வொரு தடவையும் உன்ன விட்டுட்டு சானட்டோரியம் ஸ்டேஷன்ல எறங்கற ஃபீலிங் இருக்குபாரு. அதை வார்த்தையால சொல்ல முடியாது. எழுத்தால எழுதவும் முடியாது. ஒவ்வொரு தடவை இறங்கும்போதும், ச்ச, இன்னிக்கு ஆபீஸ் போகணுமா? லீவு விட மாட்டாங்களா, அப்டியே உன் கூடவே தாம்பரம் போக மாட்டேனா. அங்கெயிருந்து ரெண்டுபேரும் பீச் போற ரயில்ல ஏறி அப்டியே பீச் ஸ்டேஷன் வரைக்கும் போக மாட்டோமான்னு இருக்கும். அதுனால, ஒரு நாள் முழுக்க, பீச் ஸ்டேஷன்ல இருந்து தாம்பரம் வரைக்கும், உன் பக்கத்துலயே உக்காந்துகிட்டு மாறி மாறி போய்ட்டே இருக்கணும். அவ்ளோதான் என் ஆசை.’
‘ச்சீ, இவ்ளோதானா?’
‘என்ன ச்சீ? எனக்குத்தான் தெரியும் சானட்டோரியத்துல எறங்கற வலியும், உன் பக்கத்துலயே உக்காந்துகிட்டு நாள்பூரா ட்ரெயின்ல போற சுகமும்!!’
‘சரி, அதுதான உன் ஆசை. நிச்சயமா ஒரு நாள் நிறைவேத்திடலாம். இப்போ களம்பு போகலாம்’
‘ஆக்ஸிலெட்டர் கொடுக்கற கைகள்ல எனர்ஜியே இல்ல. ஒன்னு குடுத்தின்னா எனர்ஜியா வண்டி ஓட்டும்’
‘இருக்கற எனர்ஜியை வெச்சு ஓட்டு அப்புறம் கொடுக்கறேன்’
இருவரும் புறப்பட்டார்கள். கிழக்குக் கடற்கரைச் சாலையில் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.
‘பார்த்துப் போப்பா. எதிர்த்தாப்ல ஒரு கார் வேகமா கண்ட்ரோல் இல்லாம கன்னாபின்னான்னு வர்றான். ஏய்.. பாத்து பாத்து பாத்து’
எதிரில் வந்த கார் கட்டுக்கடங்காமல் ஓடி, மாதவன் ஓட்டிச்சென்ற பைக் மேல் மோதியதில், மாதவன் அந்த இடத்திலேயே உயிரிழந்தான். கலையின் காலில் பைக் சாய்ந்ததில் எலும்பு முறிந்தது. கால்களை இழுத்துக்கொண்டு நகர்ந்து, மாதவன் உடலருகில் சென்ற கலை, மாதவனின் கைகளைப் பிடித்து முத்தமிட்டுவிட்டு மயக்கமானாள்.

சரவ் (Sarav) எழுதியது | 7 responses so far

காளை மனம்.

Filed in General, சிறுகதை முயற்சிகள் on Apr 22nd 2008

‘குமாரூ, வெளிய களம்பிடாதடா. கொஞ்சம் ரேசன் கடை வரைக்கும் போவணும்டா’ குமாரின் அம்மா கெஞ்சலாக சொன்னாள்.
‘ஒனக்கு நேரங்காலமே தெரியாது, வெளில போகும்போதுதான் இங்க போவணும் அங்க போவணும்-ப. நாளைக்கு பாத்துக்கலாம் போ!’
‘இல்லடா, இன்னிக்கு அரிசி போடறாங்கடா. செத்த போய்ட்டு வந்துருடா!!’
‘காலைலயே சொல்றதுக்கு என்ன?’
‘இப்பதாண்டா அப்பா வந்து இருவது ரூவா குடுத்துட்டுப் போனாரு.’
‘ரேசன் கடை க்யூலல்லாம் போயி நிக்க முடியாதும்மா!! அவரயே போவ சொல்றதுததான?’
கரெக்ட்டா எதிர் வீட்டு சுஜாதா ட்யூஷனுக்கு கெளம்பற நேரத்துலதான் பைய தூக்கிக்கிட்டு ரேசன் கடைக்குப் போவ சொல்லுவ. அவ ஒரு மாதிரி ஓரக்கண்ணால நக்கலா பாப்பா, அப்புறம் ஃப்ரெண்ட்ஸ்கூட சேந்துகிட்டு சிரிப்பா!! ட்யூஷன் படிக்கற மாடில இருந்து பார்த்தா ரேசன் கடை க்யூ நல்லாத் தெரியும். அங்க நின்னு என்னைப் பாத்து ஏதாவது சொல்லி சொல்லி கிண்டலடிப்பா!! என்று நினைத்துக்கொண்டான்.

‘இல்லடா! இப்பொவே போனா கூட்டமா இருக்காது. இன்னிக்கு பொங்கலுக்காக ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் இலவச வேட்டி சேலையும் தர்றாங்கலாம். அதுனாலதாண்டா சொல்றேன். போய் வாங்கிட்டு வந்துருடா’
‘வேட்டி சேல குடுன்னெல்லாம் நான் போய் கேக்கமாட்டேம்மா. நீயே போ!’
‘நீ கேக்கவேண்டாம்டா அவங்களே குடுத்துருவாங்க. நீ வாங்கிட்டு வந்தா போதும். செத்த செரமம் பாக்காம போய்ட்டு வந்துருடா’
பையையும் பணத்தையும் கொடுத்தாள்.
‘இவ்ளோ பெரிய பையெல்லாம் எடுத்துட்டு போவ சொல்லாதம்மா, மஞ்ச பை சின்னது ஒன்னு இருக்குமே அது எங்க?’
சின்ன பையா இருந்தா, சுஜாதாவுக்குத் தெரியாம, மடிச்சு பேண்ட் பாக்கெட்டுக்குள்ள வெச்சுகிட்டு போய்டலாம்
‘அது பத்து கிலோ புடிக்காதுடா, காது அறுந்துடும்’

வேண்டா வெறுப்பாக பையையும் பணத்தையும் வாங்கிக்கொண்டான். சட்டையில் இருந்த சுறுக்கங்களை நீட்டிக்கொண்டான். தலை வாரிக்கொண்டான். வாசல் பக்கம் நோட்டம் விட்டான்.
சுஜாதா கெளம்பியிருப்பாளா?
‘இப்பொவே போனா கூட்டம் இருக்காதுடா’
‘பணத்த குடுத்துட்டல்ல, உன் வேலையப் பாத்துகிட்டு போ. எப்போ போவணும்-னு எனக்குத் தெரியும்.’
கடிகாரத்தைப் பார்த்தான்.
இந்நேரம் கெளம்பி போயிருப்பா

காலில் செருப்பு மாட்டிக்கொண்டு வெளியில் வரவும், சுஜாதா, அவள் வீட்டில் இருந்து வெளியில் வரவும் சரியாக இருந்தது.
ச்ச, இவ்ளோ நேரம் ஆளையே காணும், கரெக்ட்டா களம்பற நேரத்துல வர்றா பாரு!! இன்னிக்குன்னு பார்த்தா லேட்டா கெளம்பணும்? கையில பை வெச்சிருக்கறத பார்த்திருப்பாளோ? பையை அவசரமாக மறைத்தான். பார்வையை வேறுபுறம் திருப்பிக்கொண்டு வேகமாக நடந்தான். ரேஷன் கடை அவர்கள் இருந்த தெருவில் இருந்து மூன்றாவது தெருவில் இருந்தது.
பின்னாடியே அவளும் வர்றாளோ? பையை முன் பக்கமா வெச்சுக்கணும்
தெரு முனைவரையிலும் வேகமாக நடந்தவன், திரும்பிப் பார்த்தான். சுஜாதா பின்னால் வந்துகொண்டிருந்தாள்.
குறுக்குச் சந்து வழியாக புகுந்து வேகமாக நடந்து ரேஷன் கடையை அடைந்தான். ஆண்கள் வரிசையில் தன்னை இணைத்துக்கொண்டான். சுற்றும் முற்றும் பார்த்தான். சுஜாதாவை காணவில்லை. ட்யூஷன் மாடியைப் பார்த்தான். அங்கும் யாரும் இல்லை. கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டான். கடை அதிகாரிகளையும் கடையில் இருந்து அரிசி வாங்கிக்கொண்டு போகிறவர்களையும் நோட்டம் விட்டான்.
இலவச வேட்டி சேலை எல்லாருக்கும் தர்றாங்களா? கேட்டாத்தான் தர்றாங்களா இல்ல கேட்கலன்னாலும் தர்றாங்களா?
யோசித்துக்கொண்டே திரும்பியவன் அதிர்ந்தான். சுஜாதா வந்துகொண்டிருந்தாள்.
அடப்பாவி இங்கயும் வர்றாளே. அவளைப் பார்க்காததுபோல் திரும்பிக்கொண்டான். சில வினாடிகள் கழித்த ஓரக்கண்ணால் பார்த்தான். அவனுக்கு அருகில் வந்திருந்தாள். அவசரமாக யோசித்தான்.
என்ன பண்ணி இங்கேயிருந்து கெளம்பறது? சில்லறை மாற்ற வந்தவன் போல பாவ்லா செஞ்சு நழுவிட்டா என்ன?
‘ஐநூறு ரூபாய்க்கு சில்லரை இருக்கா?’ என்று வரிசையில் முன்னாடி நின்றவரைக் கேட்டான்.
‘எண்ட இல்லப்பா, பக்கத்து உரக்கடைல வேணும்னா கேட்டுப்பாரு’
நைசாக நழுவி உரக்கடைக்குள் சென்றான். சிறிது நேரம் உள்ளே நின்று கொண்டிருந்தான். உள்ளேயிருந்து, சுஜாதா உரக்கடையை தாண்டி போகிறாளா என்று கவனித்துக்கொண்டிருந்தான்.
கடையை தாண்டி போயிட்டாளா? இவ்ளோ நேரமாவா போறா? அந்தப் பக்கம் திரும்பியிருந்தப்போ க்ராஸ் பண்ணிப் போய்ட்டாளோ?
மெதுவாக வெளியில் வந்து சுற்றிலும் பார்த்தான். எங்கும் இல்லை. ட்யூஷன் மாடியில் பார்த்தான். அங்கும் இல்லை.
அப்பாடா போய்ட்டா
மீண்டும் வரிசையில் சேர்ந்துகொண்டான். இதற்குள் வரிசையின் நீளம் நீண்டிருந்தது.
மீண்டும் வரிசையில் நின்றவர்களை நோட்டமிட்டான். மீண்டும் அதிர்ந்தான். பெண்கள் வரிசையில் கடைசியாக சுஜாதா நின்றுகொண்டிருந்தாள்.
போச்சுடா, இங்கயே வந்துட்டாளா? திரும்பி நம்மள பாக்கறாளா? இவ முன்னாடி எப்டி இலவச வேட்டி சேலை கேக்கறது? பெண்கள் வரிசை சீக்கிரம் போய்டுமா? ஆண்கள் வரிசைல ஒருத்தருக்கும், பெண்கள் வரிசைல ஒருத்தருக்கும்னு மாத்தி மாத்திதான் கொடுக்கறாங்க? ஆண்கள் வரிசைல எத்தனை பேர் இருக்காங்க? ஒன்னு, ரெண்டு மூனு நாலு…பத்து பதினஞ்சு பேருக்கு மேல இருப்பாங்க போலருக்கே. அந்தப் பக்கமும் அதே அளவுதான் இருப்பாங்க போல தெரியுது

போற போக்கைப் பார்த்தா நானும் இவளும்தான் ஒன்னா போய் நிப்போம் போலருக்கே. வரிசைல இருந்து வெலகி கடைசீல போயி நின்னுடலாமா?’
வரிசையை திரும்பிப் பார்த்தான். வரிசையின் வால் அனுமார் வால் போல் நீண்டிருந்தது.
யப்பா இப்போ போயி கடைசில நின்னா இன்னும் முக்கா மணிநேரமாவது நிக்கணும்
முடிவை மாற்றிக்கொண்டு பெண்கள் வரிசையை மீண்டும் எண்ணினான்.
ஒன்னு, ரெண்டு, மூனு..
முன்னால் நிற்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது.
எனக்கு முன்னாடி இவ போய்ட்டா போதும். போய்டுவாளா? ஒன்னு ரெண்டு மூனு, இந்தப் பக்கம் ஒன்னு, ரெண்டு, மூனு
நினைத்ததுபோல் சுஜாதா முந்திக்கொண்டாள்.
‘பத்து கிலோ அரிசியும் இலவச வேட்டி சேலையும் குடுங்க’ தயக்கம் ஏதும் இன்றிக் கேட்டு பணத்தை நீட்டினாள் சுஜாதா. வாங்கிக்கொண்டு நகர்ந்தாள்.
அடுத்ததாக குமாரும் பத்து கிலோ அரிசியும், இலவச வேட்டி சேலையும் வாங்கிக்கொண்டு வந்தான்.

அவனுக்காகவே காத்திருந்த பாட்டி அவனிடம் நெருங்கி வந்து, ‘மாயரத்தம்மா மவன் குமாருதான நீ?, ஐநூறு ரூவாய்க்கு சில்லறை மாத்திட்டியா? உங்க அம்மா எனக்கு இருநூறு ரூபாய் தரணும். யார் கிட்டயோ ஐநூறு ரூபா கேட்ருக்கறதாவும், வந்தொன்ன தர்றதாவும் சொல்லிச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு வந்து வாங்கிக்கறேன்னு சொல்லு’ என்றாள்.

சரவ் (Sarav) எழுதியது | 2 responses so far

தூக்கம்.

Filed in General on Apr 17th 2008

எனக்கு ஏதோ ப்ராப்ளம்-ன்னு நெனைக்கறேன். என்னவோ ஃபோபியா. தூக்கம் வராத ஃபோபியா. கடந்த ரெண்டு மூனு வாரமா இந்த ஃபோபியா இருக்கு. எப்பவுமே இரவு 12 மணி வரைக்கும் ஏதாவது வேலையிருக்கும். தூங்கறது அதுக்கப்புறம்தான். ஆனா 6 மணி 7 மணி வரைக்கும் நல்லா தூங்குவேன். சில நேரம் லேட் நைட் வரைக்கும் வேலை பார்த்துட்டு தூங்க இன்னும் லேட் ஆகற நாட்கள்ல காலைல 9 மணி வரைக்கும்கூட தூங்குவேன்.

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ‘தில்லை’ பதிவை எழுதணும்-ன்னு நெனைச்சதுல இருந்து தினமும் ஏதாவது யோசனை ஓடிட்டே இருக்கும். கடந்த ரெண்டு வாரமா காலைல 4 மணிக்கு மேல தூங்க முடியல. இதை எழுதணும் அதை எழுதணும்-னு ஏதேதோ யோசனைகள் ஓடுது. சரி, ‘தில்லை’ பதிவ எழுதிடலாம், அப்புறம் இந்த யோசனைகள் இருக்காது-ன்னு நெனைச்சு அதையும் எழுதிட்டேன். அதை எழுதினப்புறம் இன்னொரு சிறுகதை எழுதலாம்-னு நெனைச்சேன். அன்னிலருந்து அந்தக் கதைல வர்ற வசனங்களா மூளைல ஓடுது, சினிமா மாதிரி. அதுலயே கரெக்ஷன்ஸ் வேற நடக்குது. பாதி நல்லா ஞாபகம் இருக்கு. பாதி கொஞ்சம் ‘வேகா’ இருக்கு!!. கதைல வர்ற பாத்திரங்கள் என்னோட பேசுது. கனவு மாதிரி ஆனா கனவு இல்லை. நான்தான் தூங்கவே இல்லையே. நானே கதையோட பாத்திரமா இருந்து கதைய சொல்றமாதிரி, கதையோட பாத்திரங்களை பாத்திரங்களாகவே வெச்சு சொல்ற மாதிரி, கதைய யாரை ஹீரோவா காட்டலாம், கடைசில என்ன பஞ்ச் வைக்கலாம்-னு கதையைப் பத்தி யோசனை. இந்தக் கதைனால யாருக்கு என்ன பயன், இந்தக் கதாப் பாத்திரம் நமக்கு தெரிஞ்சவங்களோட வாழ்க்கைல நடந்ததை அடிப்படையா இருக்கே, அதுனால அவங்களுக்கு ஏதாவது பாதிப்பு வருமா? மனைவியோட உறவினர்களைத் திட்றமாதிரி கதைல வருதே, மனைவி படிச்சா தெரிஞ்சுடுமா? தெரிஞ்சா என்னவாகும், சாப்பாடு கெடைக்குமா? இப்டி பல கேள்விகள் பல பதில்கள் எல்லாம் ஓடுது. எதைப்பத்தியும் யோசிக்காம தூங்கு-ன்னு என்னையே கட்டாயப்படுத்திகிட்டு தூங்க முயற்சி செஞ்சா அப்போதான் அதிகமா யோசிக்குது. ஆக மொத்தம் தூக்கம் நஹி.

காலைல நாலு மணிக்குமேல தூங்க முடியாம சில நாட்கள் காலைல 5.30 மணிக்கே அலுவலகம் போய்ட்டேன். நைட் ஷிப்ட்ல வேலை பாக்கறவங்க காலைல (எழுந்து)வீட்டுக்குக் களம்பறதுக்குள்ளயே நான் போய்ட்டேன். இப்போகூட இரவு மணி ரெண்டைத்தாண்டியும் உங்ககூட பேசிட்டு இருக்கேன். எனக்கு என்ன ஃபோபியா-ன்னு உங்களுக்குத் தெரியுதா??

சரவ் (Sarav) எழுதியது | 6 responses so far

தில்லை.

Filed in General on Apr 9th 2008

‘பீப் பீப், பீப் பீப், பீப் பீப், பீப் பீப், பீ….ப்’ என்று விசில் ஊதி தினமும் காரை சரியாக பார்க் பண்றதுக்கு உதவி செய்வாரு அந்த அலுவலக செக்யூரிட்டி. காரை சரியா நிறுத்திட்டு வெளியே வரும்போது, நேரா நின்னு சல்யூட் பண்ணி ‘வணக்கம் சார்’-ம்பாரு. பதில் வணக்கம் சொல்லிட்டு அலுவலகம் உள்ளே போவேன். சில மாதங்கள் இது தொடர்ந்தபின்னாடி, வெறும் ‘வணக்கம் சார்’ வளர்ந்து ‘நல்லா இருக்கீங்களா சார்?’, ‘என்னசார் இன்னிக்கு சீக்கிரமே ஆபீஸ் வந்துட்டீங்க?’, ‘என்ன சார் ரெண்டு நாளா ஆளையே காணும், லீவுல போய்ட்டீங்களா?’-ங்கற அளவுக்கு பரிச்சயமானது.

அவருக்கு ஒரு நாற்பத்தைந்து-ல இருந்து ஐம்பது வயது இருக்கலாம். ஒல்லியான தேகம். உடம்போடு பொருந்தாத கொஞ்சம் பெரிய சீருடை. பாலீஷ் பார்த்திராத ஷூ. நிச்சயம் சென்னையை சேர்ந்தவரில்லை-ங்கறதை அறிவிக்கும் வெகுளியான முகம், வெகுளியான சிரிப்பு. இதெல்லாம் அவரோட அடையாளங்கள். பெரும்பாலும் வட இந்திய மொழிகள் பேசும் செக்யூரிட்டிகள் இருக்கும் அலுவலகத்துல நல்ல தமிழ் பேசும் ஒரு சிலர்ல அவரும் ஒருத்தரு. ‘எங்க சார், நாள் பூரா வேலை செஞ்சாலும் சம்பளம் ரொம்ப கம்மியாத்தான் சார் தர்றாங்க’. ‘மத்த மத்த கம்பெனிகள்லல்லாம் இங்க தர்றது மாதிரி டபுளா தர்றாங்க சார்’ங்கற மாதிரி புகார்கள் சொல்லிட்டு ஓரிரு வாரங்கள் அல்லது ஓரிரு மாதங்கள்ல காணாம போகும் செக்யூரிட்டிகள்ல இருந்து அவரு கொஞ்சம் மாறுபட்டவரு.

ரெண்டு மூனு மாசம் வரைக்கும் அவரோட பேரைக்கூட நான் கேட்டதில்லை. காரைப் பார்த்தவுடனே சல்யூட் அடிப்பாரு. நானும் வணக்கம் சொல்லிட்டு போய்டுவேன். சில நாட்கள் கார்ல வராம பைக்ல வரும்போது, ‘ஹெல்பெட் போட்ருந்ததால அடையாளம் தெரில சார். நல்லா இருக்கீங்களா? கார்ல வர்றதைவிட நீங்க பைக்ல வரும்போது நல்லா இருக்கீங்க சார்’ம்பாரு. சென்னை ஹோட்டல்கள்லல்லாம் காரை நிறுத்தும்போதும் திரும்ப எடுக்கும்போதும் உதவி செய்யற செக்யூரிட்டிகள், காரை முழுசா வெளில எடுத்தப்புறம் சீட் பக்கமா வருவாங்க. ‘அவங்களுக்கெல்லாம் சம்பளம் ரொம்ப கம்மியாத்தாண்டா இருக்கும், ஏதாவது கொடுடா’-ன்னு அம்மா எப்பவும் சொல்வாங்க. அவங்களும் கொடுத்தா வாங்கிப்பாங்க. அதுமாதிரி ஒரு நாளும் அவரு எதிர்பார்த்தது இல்லை. சில மாதங்களுக்கு அப்புறம் ஒருநாள் அவரோட பேரு தில்லை என்கிற ‘தில்லைராஜன்’-ன்னு சொன்னாரு.

ரெண்டு மூனு மாசங்களுக்கு முன்னாடி ஒரு வாரம் ஆபீஸ் வராம இருந்தேன். திரும்ப வந்தப்போ,
‘என்ன சார், ரொம்ப நாளா ஆளையே காணும்?’ எப்பவும் கொஞ்சம் சத்தமாத்தான் பேசுவாரு.
‘ஊருக்குப் போய்ட்டேன். அதான் வரல’
‘ஓ.. எந்த ஊரு சார் நீங்க?’
‘கும்பகோணம்’
‘நான் தஞ்சாவூர் பக்கம் சார்’-ன்னு சொல்லும்போது அவர் முகத்தில ஒரு மலர்ச்சி.
‘அப்டியா? கும்பகோணம் பக்கத்துல சுவாமிமலை, தெரியுமா?’
‘ஓ.. நல்லா தெரியும் சார். முருகன் கோவில் இருக்கே. ரெண்டு மூனு தடவை வந்திருக்கேன் சார்.’
‘அதான் எங்க ஊரு’
‘எனக்கு ஊர் தஞ்சாவூர் பக்கத்துலதான் சார். தஞ்சாவூர்ல இருந்து மன்னார்குடி போற ரோட்ல இருக்கு சார் எங்க ஊரு’-ன்னு ஏதோ ஒரு பட்டி ஊரைச் சொன்னாரு.
தஞ்சாவூர் மாவட்டம்-ன்னு சொன்னொன்ன ஒரு இனம் தெரியாத பாசம் உண்டாகத்தான் செய்யுது.

இன்னொரு நாள் காலைல எட்டு மணிக்கு ஆபீஸ் வரும்போது வணக்கம் சொன்னவரு, நைட் எட்டு மணிக்கு வீட்டுக்கு கெளம்பும்போதும் இருந்தாரு.
‘என்ன சார், வீட்டுக்கு கெளம்பலையா?’
‘இல்லை சார், இன்னிக்கு நைட் ஷிஃப்ட்டும் பாக்கறேன் சார்.’-னாரு.
சரின்னு சொல்லிட்டு வீட்டுக்குப்போய்ட்டு மறுநாள் காலைல வந்தா அப்பவும் இருந்தாரு.
‘என்ன சார்’னா,
‘இது என்னோட ஷிஃப்ட் சார்’-ன்னாரு. எனக்கு புரியலை.
‘காலைல ஏழு மணில இருந்து நைட் ஏழு மணி வரைக்கும் என்னோட ஷிஃப்ட் சார். நேத்து நைட் ஷிஃப்ட்டுக்கு ஆள் இல்லாததுனாம அதையும் பார்க்க வேண்டியதா ஆய்டுச்சு சார்’-ன்னாரு.
தொடர்ச்சியா 36 மணி நேர வேலை.
‘நைட் ஷிஃப்ட் பார்த்தா அதுக்கு ஒவர் டைம் குடுப்பாங்க சார்’
‘மாச சம்பளம் 4000 ரூபா. இதுமாதிரி மாசத்துல ஏழெட்டுநாள் நைட் ஷிஃப்ட்டும் குடுப்பாங்க. அதெல்லாம் சேர்த்து 5000 ரூபா வரைக்கும் வரும் சார்.’
‘சூப்ரவைஸர்ங்களுக்கெல்லாம் ஆராயிரம் கெடைக்கும். நமக்கு அதைவிட அதிகமா வந்துடாம ஐயாயிரத்துலருந்து 5500 வரைக்கும் குடுப்பாங்க சார்’-ன்னு தொடர்ச்சியா சொல்லிட்டு இருந்தாரு.
‘நைட் தூங்குவீங்களா? இல்ல சுத்தமா தூங்கவே மாட்டீங்களா?’
‘நைட் ரெண்டு மணி வரைக்கும் வேலை செஞ்சுட்டு போறவங்க இருப்பாங்க சார். (சாயங்காலம் வந்துட்டு நைட் வீட்டுக்கு கெளம்பற ஷிஃப்ட்ல வேலை பாக்கற ஐடி மக்கள்). அவங்களை ட்ராப் பண்ண கார்கள் வந்து போய்ட்டு இருக்கும் சார். மூனு மணிக்கு மேல அவ்ளவா கார்கள் வராது. அப்போ கொஞ்ச நேரம் தூங்கிக்கலாம் சார். காலைல அஞ்சு மணிக்கு சூப்ரவைஸர் வந்து எழுப்பிவிட்றுவாரு சார்’ன்னு பேசிகிட்டு இருந்தவரு, அடுத்தடுத்து கார்கள் வரவே ‘வரேன் சார்’-ன்னுட்டு அதைப் பார்க்கப் போய்ட்டாரு.

இன்னொருநாள் பேசும்போது, ‘சென்னைக்கு எப்போ வந்தீங்க?’-ன்னு கேட்டேன்.
‘இங்க வந்து மூனு வருஷம் ஆகுதுசார். முன்னாடி திருச்சில இருந்தோம்.’
‘எங்க குடும்பம் விவசாயம் குடும்பம்தான் சார். ஊர்ல நாலு குழி நெலம் இருந்துச்சு. அதுல நெல்லு, கடலை, உளுந்து எல்லாம் பயிர் பண்ணுவோம். கடலை உளுந்தெல்லாம் புடுங்கி ரோட்லயே போட்டு காய வெச்சு, சுத்தம் பண்ணி மார்க்கெட்டுக்கு அனுப்புவோம். ஆனா, தேவையான நேரத்துக்கு தண்ணீர் வராததுனால விவசாயம் ஒழுங்கா பண்ண முடியல. ஒரு போகத்துக்கு தண்ணீர் இருந்துச்சுன்னா அடுத்த போகம் பயிர் பண்றதுக்கு அடுத்த வருஷம் வரைக்கும் காத்திருக்க வேண்டியிருந்துச்சு. அதுனால சரியான வருமானம் இல்லாமப் போச்சு. அப்புறம், இருந்த நெலத்த வித்துட்டு திருச்சி மெயின்காட்கேட்ல ஒரு வளையல் கடை ஆரம்பிச்சேன்.’ பேசும்போது அவர் முகத்தில் இருந்த உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்லமுடியாது. சந்தோஷம், துக்கம், இயலாமை, வெறுமை எல்லாம் கலந்த ஒரு உணர்வை பார்க்க முடிந்தது.

‘வளையல் கடைல நல்ல ஓட்டம் இருக்கும் சார். வாரத்துல ரெண்டு மூனு நாளு சைக்கிள்ல கெளம்பி சமயபுரம், ஸ்ரீரங்கம்-ன்னு பக்கத்துல இருக்குற ஊருக்கெல்லாம் போயி வளையல் விப்பேன் சார்.’-னு சொல்லும்போது ஒரு பெருமித உணர்வு.
‘பொண்ணுங்க கையைப் பிடிச்சு வளையல் போட்டுவிடற தொழில்-ங்கறதுனால ஜாக்கிறதையா இருக்கணும் சார். ஐயர் வீட்டு மாமிகள் கையெல்லாம் பிடிச்சு வளையல் போட்டுவிட்றுக்கேன் சார்’-ன்னு சொல்லும்போது வெகுளியான பார்வை.
‘ஆனா அந்த நேரத்துல நண்பர்ங்க சரியா இல்ல சார். தினமும் சாயங்காலம் கடைகட்டும்போது ஆயிரம் ரெண்டாயிரம்-ன்னு நிக்கும். அதுனால நெறைய நண்பர்கள் எப்பவும் இருப்பாங்க. ராத்திரியாயிடுச்சுன்னா எல்லோரும் சேர்ந்து குடிப்போம். அதுனால காதுகூட கொஞ்சம் மந்தமா ஆய்டுச்சு. நெறையா குடிச்சதுனால சைனஸோ ஏதோ-ன்னு டாக்டர் சொன்னாங்க. இப்பவும் இடது காது கொஞ்சம் கம்மியாத்தான் கேட்கும்’. அவர் சத்தமாகப் பேசுவதற்கு காரணம் இப்போதான் புரிஞ்சுது.
‘அதுனாலதான் நீங